'குற்றவாளியாக நிற்கிறான் இந்திரன்... '
1920 களில் இரக்கால் தாஸ் பானர்ஜியாலும் சர் ஜான் மார்ஷலாலும் சிந்து
சமவெளியில் மிகப்பழமையானதோர் நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட போது, இந்திய
நாகரிகத்தின் தொடக்க காலமென மேற்கத்திய இந்தியவியலாளர்கள்
நிர்ணயித்திருந்த காலமான கி.மு.1500 பின்னோக்கி தள்ளப் பட வேண்டியது
அவசியமானது. அத்துடன் அது இந்திய கலாச்சாரத்துடனேயே உறவற்றதோர் புதிராக
அறியப்பட்டது. எனினும் அகழ்வாராய்வாளர்கள் தொடர்ந்து பண்பாட்டு
தொடர்ச்சியினை நிறுவும் விதமான கண்டுபிடிப்புகளை கண்டு வந்தனர். எனவே
ரிக் வேத கால நாகரிகத்துக்கு தொடர்பற்ற அதற்கு முந்தையதோர் பண்பாடாக
சிந்து சமவெளி நாகரிகம் அறியப்படலாயிற்று. இதனைத் தொடர்ந்து எழுப்பப்
பட்ட ஆரியப்படை யெடுப்பு / புலப்பெயர்வு கோட்பாட்டுச் சித்திரம்
பின்வருமாறு அமைகிறது:
1. வேதங்களில் கூறப்படும் ஆரியர்களின் எதிரிகளான பூர்வீகக்குடிகள் உயர்
நாகரிகத்துடன் வாழ்ந்த நகரவாசிகள். அந்நகரங்களை அழித்த படையெடுப்பாளர்களே
ஆரியர்கள்.
2. ஆரியர்கள் இயற்கையை குறிப்பாக நெருப்பினை வழிபடும் நாடோடிகள். சோம பான
சடங்குகள் ஆரியர்களின் சமய வாழ்வில் முக்கியமானவை. சிந்து சமவெளி மக்களோ
உயர் தெய்வ வணக்கம் உடையவர்கள், குறிப்பாக சிவன் மற்றும் தாய் தெய்வ
வழிபாடு.
3. சிந்து சமவெளி மக்கள் கடல் பயணம் செய்பவர்கள். ஆரியர்கள் கடல்
குறித்து அறியாதவர்கள்.
4. சிந்து சமவெளி மக்கள் எழுத்து வடிவம் பெற்ற மொழி
கொண்டவர்கள்.ஆரியர்கள் எழுத்தறிவற்றவர்கள்.
5. வேத கலாச்சார இறுதிச்சடங்கு உடலை எரிப்பதாகவும் சிந்து சமவெளியிலோ
புதைப்பதாகவும் உள்ளது.
இந்த உயரிய நாகரிகத்தின் மீது விழுந்த 'வேத இருட்காலத் திரை '
விலகுகையில் நாம் காண்பது வர்ணாஸ்ரம தர்மம் சார்ந்த சமுதாயமும், அதில்
விஷ்ணு,சிவன், சூரியன் மற்றும் அன்னைத் தெய்வங்களை மையம் கொண்ட
சமயமும்.அகழ்வாராய்வு கண்டுபிடிப்புகள் மூலம் இக்கருத்தியலுக்கு முக்கிய
வடிவம் கொடுத்தவர் சர் மொர்ட்டிமர் வீலர். தற்போது மிகவும் பிரசித்தி
பெற்று விட்ட அவரது வார்த்தைகளில் 'குற்றவாளியாக நிற்கிறான் இந்திரன்,
மொஹஞ்சதாரோவில் பேரழிவையும் படுகொலை களையும் நடத்தியதற்காக. '
'...ரிக்வேத யதார்த்தத்தினூடே பயணிக்கும் உணர்வு... '
1960 களில் வீலரின் கோட்பாட்டினை மேலும் உறுதிப்படுத்த சிந்து சமவெளி
பகுதிகளில் மேலும் அகழ்வாய்வுகளில் ஈடுபட்ட அமெரிக்க அகழ்வாய்வு நிபுணர்
ஜியார்ஜ் டேல்ஸ் மிகுந்த ஆச்சரியமடைந்தார். வீலரின் பல முடிவுகள்
வெளிப்படையாகவே தவறானவையாக இருந்தன. திறமையானவரும் சர்வதேச அளவில்
அகழ்வாய்வு பிதாமகருமான வீலர் எவ்விதத்திலும் படுகொலை என கருத
முடியாததோர் சூழலை படுகொலையாக மாற்றியிருப்பதை கண்டார். உதாரணமாக
ஆரியப்படையெடுப்பில் மண்டை உடைக்கப்பட்டு இறந்ததாக வீலர் கண்ட
மண்டையோடொன்று காயம் ஆறி பல வருடங்கள் உயிர்வாழ்ந்ததற்கான சான்றுகளுடன்
இருந்தது. டேல்ஸ் இது குறித்து பின்வருமாறு குறிப்பிடுகின்றார்,
'படையெடுப்பும் படுகொலையும் நடந்திருந்தால் எரிக்கப்பட்ட கோட்டைகள் எங்கே
? அம்பு முனைகளும், ஈட்டிகளும், உடைபட்ட (படையெடுத்தோரின்) தேர்களும்,
படையெடுத்தோர் மற்றும் படுகொலைச் செய்யப்பட்டவர் களின் சடலங்களும் எங்கே
? ...மிகக் கடினமான, முழுமையான அகழ்வாராய்ச்சிக்குப் பிறகும், ஆராயப்பட்ட
எந்த சிந்து சமவெளி நாகரிக மையமும், ஆயதமேந்திய ஆரியப் படையெடுப்பின்
விளைவாக வீழ்ந்ததற்கு எந்த சான்றும் இல்லை. '1 எனில், இந்த நாகரிகம்
எவ்வாறு சுவடற்று அழிந்தது ? அந்நாகரிகம் அழியவில்லை மாறாக இன்றும்
வாழ்கிறது என்கின்றனர் பல அகழ்வாய்வாளர்கள். இன்றும் தொடரும் வேத
நாகரிகத்துக்கும் சிந்து சமவெளி நாகரிகத்துக்குமான இடைவெளியின்
போலித்தன்மையினை அகழ்வாய்வு
வெளிப்படுத்தி வந்தது. உதாரணமாக மிகவும் பிரபலமானதாக கருதப்படும், சிந்து
சமவெளி நாகரிக முத்திரையான ஒற்றைக் கொம்பு விலங்கு ஆராய்ச்சியாளர்களால்
ரிக் வேத சின்னங்கள் மூலம் அறியப்படுகிறது. 'அவ்விலங்கின் முன்
காணப்படும் தண்ணீர் தொட்டி போன்ற அமைப்பு சோம பானச் சடங்குடன்
தொடர்புபடுத்தப்படுகிறது. '2 மேலும் ஆரியர்களுக்கே உரியதாக அறியப்பட்ட
நெருப்பு வழிபாட்டுடன் தொடர்புடைய வேள்வி பீடங்கள் சிந்து சமவெளி
நாகரிகத்தின் பல தளங்களிலும் அறியப்பட்டுள்ளது. 'சல்ப சூத்திரம் மற்றும்
சதாப்த பிரமாணம் ஆகியவற்றில் வேத வேள்விக்காக அமைக்கப்படும்
சூத்திரங்களுக்கும் ஹரப்பா அகழ்வாய்வில் காணப்படும் உறைந்த கணித
அறிவிற்கும்
...
read more »